ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 53). இவர் கோவையில் உள்ள தமிழக அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவி ராதாவிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று காலை ரங்கசாமி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார். மீண்டும் மாலை ராதா வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது. கணவர், ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை.
இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாடிக்கு சென்று பார்த்த போது அங்குள்ள பாத்ரூமில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், ரங்கசாமி பணிச்சுமை காரணமாகவும் உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவும் தான் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
0 coment rios: