இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 01.01.2024-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மூலப்பாளையம் ஜே.சி.ஐ பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல், ஆணைக்கல்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற முகாம்களில் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் மற்றும் பலர் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் உள்ளிட்டவைக்கும் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவி புரிந்தனர்.
விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்றும் (சனிக்கிழமை) மற்றும் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: