ஈரோட்டில் நேரம் முடிந்து ஓட்டலில் சாப்பிட அனுமதி மறுத்த ஊழியர்களை சரமாரியாக தாக்கி ரகளையில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ஈரோடு மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசங்கர். இவர் சூரம்பட்டி நால்ரோட்டில் தூத்துக்குடி பரோட்டா என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய ஓட்டலில், நேற்று இரவு நான்கு இளைஞர்கள் உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளனர். நேரம் முடிந்ததால் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட முடியாது. பார்சல் மட்டுமே கட்டி தரப்படும் என இளைஞர்களிடம் ஓட்டல் ஊழியர்கள் கூறி உள்ளனர்.
அப்போது, மது போதையில் இருந்ததாக கூறப்படும் இளைஞர்கள் ஓட்டல் ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந் பொருட்களைக் கொண்டு ஊழியர்களை தாக்கி அடிதடியில் ஈடுபட்டனர். மேலும், ஓட்டலில் பணியாற்றி வரும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சேதுராமன் (வயது 27 ) என்பவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்று உள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் ஓட்டலில் பொருத்தி இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த தாக்குதலில் சேதுராமனுக்கு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.
0 coment rios: