பாண்டியாறு - மோயாறு இணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி, இணை ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலபதி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள்பயன்பெறும் வகையில் பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.
ஏனெனில் தற்போது பவானிசாகர் அணை பாசன பகுதிகளில் கடுமையான தண்ணீர் நெருக்கடி வரத்தொடங்கி உள்ளது. பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளவான 32.8 டிஎம்சிக்கு பதிலாக தற்போது 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த கால புள்ளி விபரங்களின் படி 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீர் பற்றாக்குறை ஏற்படுவதை அறிய முடிகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகரிப்பற்கு பாண்டியாறு - மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் 60 ஆண்டு கால விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும் என்பதுடன் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: