தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையத் தடுக்க போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் இணைந்து கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மசூத பேகம் உள்ளிட்ட போலீசார், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில், பெருந்துறை பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆர்.கே. ஆயில் ஸ்டோர் மற்றும் பல சரக்கு கடையில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த கடையின் உரிமையாளர் ஜமீன் ராசு (48). இவர் தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை (வெள்ளையன் அணி) ஈரோடு மாவட்டத் தலைவராக உள்ளார். இவரது கடையின் மேல் மாடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை (வெள்ளையன் அணி) ஈரோடு மாவட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் வைத்து தான் ஜமீன் ராசு, பெங்களூரில் இருந்து குட்காவை வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் 50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
மேலும், பெருந்துறை போலீசார் ஜமீன் ராசு மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர், இச்சம்பவம் பெருந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: