ஈரோடு கோட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13ம் தேதி பகல் பத்து உற்சவ நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மோகினி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவ சிலைக்கு திருமஞ்சனம் நடந்தது.
இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி - பூதேவி, சமேத பெருமாளுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்ற பக்தர்கள் பரமபத வாசலில் நுழைந்து கோவிலை சுற்றி வந்து கோபுர தரிசனம் செய்த பின்னர் மூலவரை வழிபட்டு வெளியே வரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. வருகிற 1ம் தேதி வரை ராபத்து உற்சவ நிகழ்ச்சயும், முத்தங்கி சேவையும் நடக்கிறது. மேலும், 1ம் தேதி இரவு 7 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம் எனப்படும் திருவாசல் சாற்றுமுறையுடன் விழா நிறைவடைகிறது.
0 coment rios: