ஈரோடு மாவட்டம் ஆசனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பண்ணாரி - மைசூர் சாலையில் காரப்பள்ளம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வன், காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி மற்றும் போலீசார் காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த பொலிரோ பிக்கப் வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 12 மூட்டைகளில் 600 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிந்தது. பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், தாளவாடி அருகே உள்ள பழைய ஆசனூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 33) என்பவர் ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதனையடுத்து ரேஷன் அரிசியுடன் வேனை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: