வெள்ளி, 5 ஜனவரி, 2024

விஜயகாந்த் மறைவு: ஈரோட்டில் அனைத்துக் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம்

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், அவரது மறைவையொட்டி கட்சி மற்றும் அமைப்பு பாகுபாடு இல்லாமல், பல்வேறு தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஈரோடு மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில், மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந் தலைமையில், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த அமைதி ஊர்வலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் இருந்து தொடங்கி, பன்னீர்செல்வம் பூங்கா, காந்திஜி ரோடு வழியாக காளைமாட்டு சிலை அருகில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, விஜயகாந்தின் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. 

அப்போது, கேப்டன் விஜயகாந்தின் சினிமா பயணம் மற்றும் அரசியல் பயணத்தில் சந்தித்த சவால்கள் குறித்து தங்களது நினைவுகளை ஒவ்வொருவராக பேசினர். இந்நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதானந்தம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: