ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன.இவை சில நேரங்களில் பாதை மாறியோ அல்லது இரை தேடியோ அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுவது உண்டு. யானை, புலி போன்ற விலங்குகளும் இதற்கு விதி விலக்கல்ல. யானைகளால் பயிர் சேதம் ஏற்படுகிறது என்றால் சிறுத்தை புலி போன்ற விலங்குகளால் உயிர் சேதம் கூட ஏற்பட்டு விடுகிறது.
இந்த நிலையில் சத்தி கோபி சாலையில் அரியப்பம்பாளையம் பகுதியில் இரவு சிறுத்தை ஒன்று சாலையை கடந்து செல்வதை சிலர் பார்த்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். கால் தடம் சிறுத்தையின் கால்தடம் போல் உள்ளதாக கூறிய வனத்துறையினர் அதன் நடமாட்டத்தை தொடந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர். முன்னதாக பவானிசாகர் சாலையில் மாரனூர் என்ற இடத்தில் சிலர் சிறுத்தையை பார்த்ததாகவும், தற்போது இன்டியம்பாளையம் பகுதியில் தென்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையே இரவு ஊருக்குள் புகுந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியாததால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனையடுத்து அரியப்பம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றும், மேலும், இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 coment rios: