திங்கள், 4 மார்ச், 2024

தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

தென்னக காசி எனப்படும் அவல்பூந்துறை பைரவர் கோவிலில் நடைபெற்ற அஷ்டமி பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் திருக்கரங்களால் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையத்தில் தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு.

தேய்பிறை அஷ்டமி தினம் கால பைரவருக்கு உகந்த தினம் என்பதால் இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் தங்கள் கைகளால் பைரவருக்கு அபிஷேகம் செய்தனர். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து அபிஷேகம் செய்தனர்.

பைரவ பீடத்தின் ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பைரவருக்கு பாலபிஷேகம் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையை விஜய் ஸ்வாமிஜி நடத்தி வைத்தார். இதனையடுத்து பக்தர்கள் பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்திற்கும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

முன்னதாக கோயிலின் முன்பு உள்ள பைரவர் சிலைக்கு பக்தர்கள் பூசணிக்காயில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். தேய்பிறை அஷ்டமி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த அஷ்டமி பூஜையை முன்னிட்டு ஈரோடு- பழனி செல்லும் ரோட்டில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் அரச்சலூர் போலீசார் ரோட்டின் இருபுறமும் டிவைடர் வைத்து பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: