வெள்ளி, 8 மார்ச், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நாளை சனிக்கிழமை (மார்ச் 09) காலை 10 மணிக்கு அனைத்து வட்டங்களிலும் தலா ஒரு கிராமத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் புதிய ரேஷன் கார்டு பெற மனு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் இணைத்தல், மாற்றம் செய்தல் போன்றவைகளுக்கு மனு வழங்கலாம்.

அதன்படி, ஈரோடு வட்டத்தில் மேட்டுநாசுவம்பாளையம் காளிங்கராயன்பாளையம் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், பெருந்துறை வட்டத்தில் செல்லப்பம்பாளையம் கடையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் கனகபுரம் கடையில் உதவி ஆணையர் தலைமையிலும் நடக்க உள்ளது.

கொடுமுடி வட்டத்தில் நாகமநாயக்கன்பாளையம் கடையில் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் கலிங்கியம் கடையில் கோபி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நம்பியூர் வட்டத்தில் கோசனம் கடையில் சின்னபுலியூர் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும் நடக்கிறது.

மேலும், பவானி வட்டத்தில் மைலம்பாடி கடையில் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) தலைமையிலும், அந்தியூர் வட்டத்தில் பிரம்மதேசம்-2 கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் அரியப்பம்பாளையம் கடையில் ஆப்பக்கூடல் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும், தாளவாடி வட்டத்தில் ஒசூர் கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: