செவ்வாய், 30 ஏப்ரல், 2024

சத்தியமங்கலத்தில் சோகம்: கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35). கொசுவலை வியாபாரி. இவர் தனது மனைவி ரஞ்சிதா (வயது 30), மகன் அபிஷேக் (வயது 8), மற்றும் மகள் நித்திஷா (வயது 7) ஆகியோருடன் நேற்றிரவு காரில் கரூர் சென்று விட்டு இன்று (மே 1) அதிகாலை சிறுமுகை நோக்கி சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கார் நெசவாளர் காலனி அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு கார் முருகன் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த முருகன், ரஞ்சிதா, அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நித்திஷா சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இவ்விபத்தில் மற்றோரு காரில் வந்த கல்லூரி மாணவர்களான சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மோகன் (வயது 21), சேலத்தைச் சேர்ந்த சுஜித் (வயது 21) திருப்பூரைச் சேர்ந்த விஷால் பத்ரி (வயது 21) மற்றும் ஓசூரைச் சேர்ந்த கார் டிரைவர் அக்சரா (வயது 21) ஆகிய நான்கு பேரும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது, இந்த விபத்து தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: