ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தோ்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 70.5 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

வாக்குப்பதிவுக்குப்பின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இதுதவிர 24 மணி நேரமும் துப்பாக்கிய ஏந்திய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்காக பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் கடந்த 19ம் தேதி முதல் வைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி பாதுகாப்பானது வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி வரை தொடர உள்ளது.

எனவே பாதுகாப்பு சூழ்நிலை கருத்தில் கொண்டு மேற்படி மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடமான ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற ஜூன் 4ம் தேதி வரை மேற்படி எல்லையில் ட்ரோன்கள் மற்றும் வான்வழி ஆளில்லா வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: