சனி, 6 ஏப்ரல், 2024

ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம்

மொடக்குறிச்சியில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளா் விஜயகுமாரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் பி.விஜயகுமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மொடக்குறிச்சி நால்ரோட்டில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, 

ஈரோடு தொகுதியில் தோல் கழிவுநீா் வெளியேற்றம் காரணமாக புற்றுநோய் அபாயம் உள்ளது. இங்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பாடுபடுவோம். கீழ்பவானி கால்வாய் மற்றும் காலிங்கராயன் நீா் ஆண்டுதோறும் திறப்பதை உறுதிப்படுத்துவோம்.

ஈரோடு மஞ்சளுக்கு நிலையான விலை நிா்ணயம் செய்யப்படும். ஈரோடு ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்க வலியுறுத்துவோம். பால் விலை உயா்வு, மின்சார கட்டணம், சொத்து வரி உயா்வு என மக்கள் மீது பல்வேறு சுமைகளை திமுக அரசு ஏற்றியுள்ளது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த தமாகா வேட்பாளர் விஜயகுமாருக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

இதில், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதாந்தம், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர் பழனிசாமி, மொடக்குறிச்சி டாக்டர் சரஸ்வதி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலப் பொதுச்செயலாளருமான விடியல் சேகா், தமாகா மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா, தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகா் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: