வெள்ளி, 26 ஏப்ரல், 2024

தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராமத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் தோட்டத்தில் உலாவி வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்கள் முன்பு அவரது தோட்டத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது.

இதனால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பீதி அடைந்தனர். தொடர்ந்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனப்பகுதியை ஒட்டியுள்ள பாக்கியலட்சுமி என்பவரது தோட்டத்தில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று காலை கூண்டில் இருந்து பயங்கரமாக சத்தம் வந்ததால் அப்பகுதி மக்கள் சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. கூண்டில் சிறுத்தை சிக்கிய தகவல் அறிந்த தாளவாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சிக்கியது ஆண் சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, வன கால்நடை மருத்துவர்கள் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர், வனத்துறையினர் சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி தெங்குமரஹாடா அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர். பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: