புதன், 8 மே, 2024

ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல் அமைப்பு

ஈரோட்டில் அனல் பறக்கும் வெயில் காரணமாக மதிய நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து கூட பெருமளவு குறைந்து போய்க் காணப்படுகிறது. பாதசாரிகள், இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் தங்கள் பயணத்தின் போது எங்காவது நிழல் கிடைத்தால் சிறிது நேரம் நின்று ஓய்வெடுத்து அதன் பின் தங்கள் பயணத்தை தொடரும் நிலை உள்ளது.

அதேபோல், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் முக்கிய சாலைகளில் கடந்து செல்லும் போதும், ஈரோடு பன்னீர்செல்வம் சிக்னல், காளை மாட்டு சிக்னல், ஆட்சியர் அலுவலகம் சிக்னல் போன்ற பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் போதும் வாகன ஓட்டிகள் அனலில் விழுந்த புழுபோல் தவித்தும், தகித்தும் போய் சோர்ந்து விடுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்கள் காத்திருக்கும் பகுதியில் நிழல் தரும் வகையில் பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் காத்திருக்கும் பகுதியில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் நடக்கும் இடங்கள் மற்றும் நர்சரிகளில் பயன்படுத்தும் பச்சை நிறத்திலான வலை வடிவ துணி கொண்டு இங்கு பந்தல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

கனரக சரக்கு வாகனங்கள் சிரமமின்றி கடந்து செல்லும் வகையில் உயரமாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து ஓரளவு வாகன ஓட்டிகள் தப்பித்தனர். இதேபோல் மாநகரில் முக்கிய பகுதிகளில் உள்ள சிக்னலில் விரைவில் பந்தல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: