செவ்வாய், 4 ஜூன், 2024

திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு சான்றிதழ் அளிப்பு

திருப்பூர் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன், அதிமுக சார்பில் அருணாச்சலம், பா.ஜனதா சார்பில் முருகானந்தம். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.
தொகுதியில் மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளர்கள் உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற தேர்தலில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 பேர் வாக்களித்தனர்.இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. 

மொத்தம் பதிவான வாக்குகளில் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 4,72,739 வாக்குகள் பெற்றார். இதேபோல, அதிமுக வேட்பாளர் அருணாசலம் 3,46,811 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் முருகானந்தம் 1,85,322 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 95,726 பெற்றனர். இத்தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் 17,737 வாக்குகள் பதிவாயின.

தபால் வாக்குகள் மொத்தம் 6,106 வரப்பெற்றன. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2,544 வாக்குகள் கிடைத்தன. அதேபோல, அதிமுகவுக்கு 1,485, பாஜகவுக்கு 1,256, நாம் தமிழர் கட்சிக்கு 476 வாக்குகளும் கிடைத்தன. அனைத்து சுற்றுகளும் முடிந்து செவ்வாய்க்கிழமை (இன்று) இரவு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பாரயனுக்கு, தேர்தல் அலுவலர் அலுவலரும், ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.

அப்போது, பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, வாக்கு எண்ணிக்கை பார்வையாளார் ஓம்பிரகாஷ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் செல்வி சௌம்யா ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: