குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் அன்று வழங்க வேண்டிய இலவச வேட்டி சேலை வழங்க இயலாது ... தற்போது உற்பத்தியாகும் இலவச வேட்டி சேலைகள் வருகின்ற பிப்ரவரி இறுதியில் தான் வழங்க வாய்ப்புள்ளது என விசைத்தறி நெசவாளர்கள் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி சேலை பொங்கல் பரிசு பொருளில் சேர்ந்து வருமா என்பது ஐயம்
நெசவாளர்களுக்கு வேலை வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்துக்காக ஏற்படுத்தப்பட்ட இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு சில ஆண்டாக உரிய காலத்தில் நுால் டெண்டர் வைத்து வழங்காததால், முழுமையான பணி கிடைக்காமல் நெசவாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நடப்பாண்டும் அதே நிலை நீடிப்பதால், வரும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ், ஈரோடு விசைத்தறி நெசவாளர் ராஜ் ஆகியோர் ஸபா நியூஸ் தமிழுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் ஈரோடு, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், லக்காபுரம், சித்தோடு, சோமனூர் உள்ளிட்ட விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு, 6 மாத காலத்துக்கு நிரந்தர வேலை கிடைக்கும் வகையில், இலவச வேட்டி, சேலை திட்டம் உருவாக்கப்பட்டது.
மாநில அளவில், 240க்கும் மேற்பட்ட விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலம், 70,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம், தலா, 1 கோடியே 77. லட்சம் இலவச வேட்டி, சேலை உற்பத்தியாகி, பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
இத்தொழிலில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள், பிற தொழிலாளர்கள் நேரடியாக, மறைமுகமாக வாழ்வாதாரம் பெறுகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் மூலம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய, நுால் மில், சைசிங் சார்ந்த தொழிலாளர்கள், பாபின் கட்டை, கூட்டுறவு சங்கங்களில் பணி செய்யம் மடி தொழிலாளர்கள், சுமைப்பணியாளர்கள், பிரின்டிங், லாரி உள்ளிட்ட வாகன தொழிலாளர் என நீண்டு கொண்டே போகிறது.
கடந்த சில ஆண்டுக்கு முன் வரை, மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, மார்ச் - ஏப்ரல் மாதம் எண்ணிக்கை, தரம், டிசைன் போன்றவை இறுதி செய்து, ஏப்ரல், மே மாதம் நுாலுக்கு டெண்டர் விட்டு, ஜூனில் உற்பத்தி பணி துவங்கும். 6 மாதம் இலக்கு நிர்ணயித்து டிசம்பப் முதல் வாரம் முதல் பணி முடிந்து, ரேஷன் கடைகளுக்கு சென்றடையும்.
கடந்த சில ஆண்டாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூட, நுால் டெண்டரை இறுதி செய்து, தரமான நுாலை வழங்காத நிலை நீடிக்கிறது, நடப்பாண்டிலும் தற்போதுதான் முழு வீச்சில் பணி துவங்கி உள்ளது. அதன்படி தற்போது பார்த்தீங்கன்னா 40% வேஷ்டிகள், 20% சேலை உற்பத்தியும் நிறைவடைந்து உள்ளது என்பதுடன்,
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் அன்று வழங்க வேண்டிய இலவச வேட்டி சேலை வழங்க இயலாது எனவும், தற்போது உற்பத்தியாகும் இலவச வேட்டி சேலைகள் வருகின்ற பிப்ரவரி இறுதியில்தான் வழங்க வாய்ப்புள்ளது என விசைத்தறி நெசவாளர்கள் தெரிவித்துள்ளதால், இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி சேலை பொங்கல் பரிசு பொருளில் சேர்ந்து வருமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
0 coment rios: