ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக ரேஷன் அரிசியை கடத்தி வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பவானிசாகர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கொத்தமங்கலம் நால்ரோடு பகுதியில் ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் சுதா, உதவி காவல் ஆய்வாளர் மேனகா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மாருதி ஆம்னி வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் சுமார் 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து வேனை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் பவானியைச் சேர்ந்த தனபால் (வயது 26) என்பதும், இந்த ரேஷன் அரிசியை வடமாநில தொழிலாளர்களிடம் அதிக அளவில் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, தனபாலை போலீசார் கைது செய்தனர். மேலும் 1,050 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் தனபால் சிறையில் அடைக்கப்பட்டார்.
0 coment rios: