புதன், 29 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில், திமுக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களது பெயர் பட்டியல் மற்றும் சின்னங்கள் கடந்த 20ம் தேதி ஒதுக்கீடு செய்து இறுதி செய்யப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட 'பேலட் ஷீட்'களை அச்சிடப்படும் பணிகளை தேர்தல் அலுவலர்கள் சென்னைக்கு நேரடியாக சென்று மேற்கொண்டனர். இந்த நிலையில், அந்த பேலட் ஷீட்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி இன்று காலை 9.30 மணியளவில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தொடங்கியது.

இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி நுழைவாயில் வேட்பாளர்கள், முகவர்கள், செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதுபோல், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள், பெயர் சின்ன பொருத்தும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் உள்ளே செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

வேட்பாளர்கள் முகவர்கள், கடும் சோதனைக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் ஸ்ரீகாந்த் முன்னிலையில் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேலட் ஷீட்களை பொருத்தும் பணியை அலுவலர்கள் மேற்கொண்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்குப்பதிவுக்காக கூடுதலாக 20 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சேர்த்து 284 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும். கூடுதலாக கடைசியில் நோட்டாவுக்கான பட்டன் இருக்குமாறு வடிவைக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 47 பட்டன்கள் தேவை உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் 3 இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளன. அதன்படி, இந்த தேர்தலில் 237 வாக்குச்சாவடிகளிலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களையும் சேர்த்து மொத்தம் 852 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 308 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இதில், 852 வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளரின் பெயர், சின்னம் அச்சிடப்பட்டுள்ள பேலட் ஷீட்கள் பொருத்தப்படுகிறது. இன்று தொடங்கிய இந்தப் பணி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: