புதன், 19 பிப்ரவரி, 2025

பெருந்துறை அருகே மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலி பறிக்க முயன்ற 2 பேர் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த கம்புளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே மொபட் வாகனத்தில் வயதான தம்பதியினர் சென்று கொண்டிருந்தனர். அந்த மொபட்டில் பயணம் செய்த நல்லம்மாள் (வயது 66) என்ற மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை குறிவைத்து அவர்களது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
தனியார் பள்ளி அருகே மொபட்டை நிறுத்தியதும், அந்த 2 வாலிபர்களும் நல்லம்மாள் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். மூதாட்டி சங்கிலியை பலமாக பிடித்து கொண்டதால் அவர்கள் தங்க சங்கிலியை பறிக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது மூதாட்டி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு பிடிபட்ட நபர்களை சரமாரியாக தாக்கினர்.

அந்தப் பகுதி மக்கள் அவர்களுடைய கை, கால்களை கட்டி போட்டு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் அளித்து அவர்கள் இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, பிடிபட்ட வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையை சேர்ந்த சூரியபிரகாஷ் (26), கௌதம் (24) என்பதும் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக நோட்டமிட்டு வரும் வழியில் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. 

இவர்களில் சூரிய பிரகாஷ் நாமக்கல்லில் உள்ள ஒரு வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வெல்டிங் பணி செய்து வந்ததும், கௌதம் பெருந்துறையில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா, வேறு ஏதேனும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களா என்பது குறித்து பெருந்துறை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: