வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

சித்தோடு: விவசாயிகளுக்கான மானிய விலை யூரியா தனியார் குடோனில் பதுக்கி கடத்தல்: 90 டன் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள பேரோடு பி.மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான குடோனில் யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ஈரோடு நுகர்பொருள் வாணிப கழகம் அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் நுகர்பொருள் வாணிப கழக ஆய்வாளர் சுபா மற்றும் வேளாண்மை மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அந்த குடோனில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், வெள்ளை சாக்குகளில் யூரியா 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக தயார் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த யூரியாவை பிரித்து அதிகாரிகள் சோதனை செய்ததில், அது விவசாயிகளுக்கு அரசு வழங்கிய யூரியா என்று தெரிந்தது.

மேலும், வெள்ளை சாக்குகளுக்கு மாற்றி வைத்து இருந்த யூரியா, கேரளாவுக்கு கடத்த முயன்றும் தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அங்கு பதுக்கி வைத்திருந்த 90 டன் யூரியாவை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து, குடோனின் உரிமையாளர் யார்?, யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்தது யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது தனியார் ஒருவர் யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது சித்தோடு போலீசில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: