செவ்வாய், 25 மார்ச், 2025

ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோபி நகராட்சி உதவியாளர் கைது

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்தவர் வருண் (வயது 30). கட்டிட பொறியாளர். இவர், புதிய கட்டடம் கட்டுமானப் பணிக்கான அனுமதி கோரி, கோபி நகராட்சி அலுவலக நகரமைப்பு பிரிவு அலுவலகத்தை அணுகினார். இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக உதவியாளராக வேலை பார்த்து வரும் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 48) ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வருண் இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை வருணிடம் கொடுத்து சுப்பிரமணியத்திடம் தரச்சொல்லி அனுப்பினர். அதன்படி, நேற்று காலை கோபி நகராட்சி அலுவலகத்துக்கு சென்ற வருண் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை சுப்பிரமணியத்திடம் கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சுப்பிரமணியத்தை சுற்றிவளைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.30 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கோபி நகராட்சி அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: