திங்கள், 24 மார்ச், 2025

ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, ரூ.30.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, 8 பயனாளிகளுக்கு ரூ.30.12 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (மார்ச் 24) நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 285 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தொழிலாளர் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.5.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணம் நிவாரண நிதியுதவி மற்றும் தீவிர நோய் பாதிப்பிற்கான உதவித்தொகையினையும், தாட்கோ சார்பில் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ் 5 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் நிலத்திற்கான பத்திரப்பதிவு செய்து பத்திரப்பதிவு ஆணையினையும் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.30.12 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் சென்னிமலையைச் சேர்ந்த து.சுப்பிரமணியன் தமிழ்ச்செம்மல் விருதினை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மாவட்ட ஆட்சியரிடம் விருதினை காண்பித்து, வாழ்த்து பெற்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், உதவி இயக்குநர் (தமிழ் வளர்ச்சித் துறை) இளங்கோ, உதவி இயக்குநர் (தொழிலாளர் துறை) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், பொது மேலாளர் (தாட்கோ) அர்ஜூன், உதவி ஆணையர் (கலால்) தியாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம், உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: