வியாழன், 20 மார்ச், 2025

ஈரோட்டில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை

ஈரோட்டில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் மாதையன் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அமுலு (42). இவர்களுக்கு செல்லதுரை என்ற மகன் இருந்தார். மேலும் 2 மகள்களும் உள்ளனர்.

இதில் செல்லதுரை பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாங்காமல் அமுலு மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தார். இதனால், அமுலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாதையன் கட்டிட வேலைக்காக பூந்துறைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அமுலு மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கில் தொங்கினார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அமுலு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: