வெள்ளி, 13 ஜூன், 2025

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!


மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் அலை மோதிய விவசாயிகள் பொதுமக்கள் கூட்டம்..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை நேற்று முன்தினம்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்த கண்காட்சியானது வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, சர்க்கரைத்துறை, வேளாண் பொறியியல் துறை என 13 தலைப்புகளின் கீழ் 218 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
இந்நிலையில், 3-வது நாள் மற்றும் நிறைவு நாளான இன்று கண்காட்சி காலை 8 மணிக்கு தொடங்கியது. 

இதில், காலை முதலே ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாது கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அவர்களது குடும்பத்தினருடனும் வந்து ஆர்வமுடன் பார்வையிட்டனர். 
இதுதவிர வேளாண் கல்லூரி மாணவ-, மாணவிகள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக வந்து கண்காட்சியினை பார்வையிட்டனர். 

முகப்பில் நவீன முறையில் சோளப்பயிர் சாகுபடி, விதவிதமான நெல் விதைகளுடன் சாகுபடி தொழில் நுட்ப காட்சி திடல், நகர்த்தி வைத்து கொள்ளும் வகையிலான மாட்டு பட்டி, கரும்பை வெட்டி, கட்டாக்கி லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றும் இயந்திரம், வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் பல்வேறு நவீன இயந்திரங்களை பார்வையிட்டதுடன், செயல்பாடுகளை விவசாயிகளும், பொதுமக்களும் வேளாண் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.


நெல், மஞ்சள், வாழை, முருங்கை உட்பட பல்வேறு பயிர்களில் குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறும் ரகங்களை காட்சிப்படுத்தியதுடன், விதைகளையும் விற்பனை செய்தனர். 


பட்டன் காளான், சிப்பி களான் என காளான் வளர்ப்பு, பெர்ரி, புளூபெர்ரி பசுமை கூடில் உற்பத்தி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காய உற்பத்தி உயர்வுக்கான தொழில்நுட்ப விளக்க திடல், தென்னை மரம், நீரா பான உற்பத்தி என 60க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அவர்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர். 


இயற்கை மற்றும் பழங்களில் உருவாக்கப்பட்ட ஐஸ்கிரீம், நீரா, டின்களில் இளநீர், கரும்பு சாறு போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்து வருவது குறித்தும் காட்சிப்படுத்தினர். 


வேளாண் கண்காட்சியின் ஒவ்வொரு அரங்கிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளித்து, அதற்கான துண்டு பிரசுரங்களையும் அலுவலர்கள் வழங்கினர். இதில், பாரம்பரிய நெல், மஞ்சள் பயிர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அரங்கும், காளாண் வளர்ப்பு கூடில், பசுமை குடிலில் புளூ பெர்ரி வளர்ப்பு, முருங்கையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கான அரங்குகள் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தது. 


மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி இன்று மாலை 7 மணியுடன் நிறைவு பெறுவதால், விவசாயிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் ஏராளமான போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: