சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
போலி ஆவணம் மூலம் கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி: நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா பகிரங்க புகார்
சேலத்தில் போலி ஆவணம் மூலம் வி.எஸ்.ஏ கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிர்வாக அறங்காவலர் மலர்விழி ராஜா புகார் கூறினார். சேலம் விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறுகையில்,
சேலத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சிறந்த கல்வி வழங்கும் நோக்குடன், கடந்த 2008 ஆம் ஆண்டு விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மாவட்ட முனிசிபல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சர்வே நிலம் அறக்கட்டளைக்கு கிரயம் செய்யப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வன்னியர் நல அறக்கட்டளை சார்பில், 2020 ஆம் ஆண்டு இதற்கு அருகில் உள்ள சர்வே எண் 121-1பி என்ற நிலத்தை வாங்கியுள்ளனர்.
இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மற்றும் உறுதிமொழி பத்திரத்தை தயாரித்து, விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளையின் நிலத்திற்குண்டான சர்வே எண்ணில், முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர். இதனை முறையாக விசாரிக்காமல், ஒரே நாளில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில், உரிய விசாரணை நடத்த ஆர்டிஓவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு விசாரணை நடத்தினால், அவர்கள் போலியாக பட்டா பெற்றது தெரிந்துவிடும். இதனையடுத்து அதனை திசைதிருப்பும் முயற்சியாக, என் மீதும், கல்வி அறக்கட்டளையின் மீதும் திட்டமிட்டே அவதூறு பரப்பி வருகின்றனர். இதனை சட்டப்படி எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
பேட்டியின் போது, விஎஸ்ஏ கல்லூரி சிஇஓ ராஜேந்திரன், முதல்வர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.



0 coment rios: