வியாழன், 12 டிசம்பர், 2024

ஈரோட்டில் சொத்துத் தகராறில் பெண்ணை வெட்டி கொன்ற உறவினர்கள்

ஈரோட்டில் சொத்துத் தகராறில் பெண்ணை வெட்டி கொன்ற உறவினர்கள்

ஈரோடு அருகே உள்ள செட்டிபாளையம் பாரதிபாளையம் முதல்வீதியைச் சேர்ந்தவர் நல்லசிவம். ஜோசியம் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவி மோளகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.
இரண்டாவது மனைவி கண்ணம்மாள் உடன் பாரதிபாளையம் பகுதியில் நல்லசிவம் வசித்து வந்துள்ளார். இதனிடையே, கண்ணம்மாவுக்கும், கண்ணம்மாவின் உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு தொடர்பாக வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (டிச.12) பிற்பகலில் நல்லசிவம், கண்ணம்மாள் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீச்சருவாளுடன் வந்த கண்ணம்மாளின் உறவினர்கள் சிலர் சரமாரியாக வெட்டி கண்ணம்மாளை படுகொலை செய்தனர்.

இதை தடுக்கச் சென்ற நல்லசிவத்திற்கு கை கால் மற்றும் முழங்காலில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து ஈரோடு ஏடிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன், தடயங்களை சேகரித்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (டிச.12) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (டிச.12) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டமானது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, கனிம வளத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை வாரியாக ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கைத்தறித் துறை, நீர்வள ஆதாரத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இதில், மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாத குக்கிராமங்களில் சாலைகளை ஏற்படுத்துதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல், அடுக்குமாடி குடியிருப்புகளில் கூடுதல் குடிநீர் இணைப்புகள் வழங்குதல், மேலும் சாலை, குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை அவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), துணை இயக்குநர் குலால் யோகேஷ் விலாஷ் (சத்தியமங்கலம் வன கோட்டம்), சுதாகர் (ஆசனூர்), மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி), பிரேமலதா (நிலம்) உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கார்த்திகை தீபத் திருவிழா: ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கார்த்திகை தீபத் திருவிழா: ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த தீபத் திருவிழாவை முன்னிட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொதுமேலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு டிச.14ம் தேதி வரை ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதன், 11 டிசம்பர், 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா. சேலம் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா. சேலம் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா. சேலம் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம். 

தமிழக திரை உலகமான கோலிவுட்டில் தற்பொழுதும் முடி சூடா மன்னனாக திகழ்ந்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களால் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சூப்பர் ஸ்டார் நீடூழி வாழ பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டும் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவுகள் வழங்கும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேலம் மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைமை அலுவலகத்தில் அவரது பிறந்த நாள் விழா வெகு உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தலைமை நற்பணி மன்ற செயலாளர் செந்தில் அறிவுறுத்தலின் பேரில்
நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் தங்களது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு கேக் வெட்டி உற்சாகமடைந்து அவர் 100 ஆண்டு காலம் நீடூழி வாழ தங்களது வாழ்த்துக்களை ஓசமிட்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து தலைமை மன்ற நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கோவில்களிலும் பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கை காட்டும் கட்சியை தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். அவரது பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் ரஜினிக்கு வேண்டுகோள்..

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கை காட்டும் கட்சியை தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். அவரது பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் ரஜினிக்கு வேண்டுகோள்..

சேலம். 

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கை காட்டும் கட்சியை தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். அவரது பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் ரஜினிக்கு வேண்டுகோள்..

தமிழக திரையுலகின் முடி சூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா உலக ரசிகர்களால் இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலத்தை சேர்ந்த தொழிலதிபரும் மிகச் சிறந்த ஆன்மீகவாதியும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்மான பாரப்பட்டி கனகராஜ் தலைமையில் அவரது ரசிகர்கள் இன்று அவர்கள் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் ஒரு பகுதியாக சேலம் செவ்வாய்பட்டையில் உள்ள வெளியேறுந்தோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாரப்பட்டி கனகராஜ் தலைமையில் அவரது ரசிகர்கள் இன்று காலை வெளியிலிருந்து ஒரு பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததுடன் வெளி இழந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டிகளை வழங்கி மகிழ்கிறனர். பிறந்தநாளின் சிறப்பம்சமாக இன்று ரஜினிகாந்த் மம்மூட்டி ஆகியோர் இணைந்து நடித்து உலக அளவில் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற தளபதி திரைப்படம் இன்று மீண்டும் சேலம் மாநகரில் உள்ள பல்வேறு முக்கிய திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி சேலம் மாநகரில் உள்ள முக்கியமான பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் அதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் தெரிவித்தார். 
அதுமட்டுமல்லாமல் கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக நடப்பாண்டும் அதே போன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், நற்பணி மன்றம் என்ற பெயரில் சேவை செய்ய தொடங்கப்பட்ட அந்த அமைப்பு ரஜினிகாந்தின் உடல்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் அதனை தொடர முடியாமல் நிறுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாகவும் ஏற்கனவே ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். இதை எடுத்து ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக இருந்த நிலையில் அப்போதும் பல்வேறு காரணங்களால் அவரது அந்த ஆசை நிறைவேற வில்லை என்றும் தெரிவித்ததோடு அவரது தமிழக மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கட்சி தொடங்க இருந்த நிலையில் கைவிடப்பட்டது. என்றாலும் அவரது சிந்தனையில் அனைத்தும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர் வாயிலாக அவரது சிந்தனைகள் தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய திட்டங்கள் அனைத்தும் முழுமையாக சென்றடைய யார் ஒப்புதல் தெரிவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் வாயிலாக ஆட்சியும் அமைய வேண்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துக்களோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தனது கோரிக்கையையும் முன் வைத்தார். 
வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாரை கை காட்டுகிறாரோ அந்த கட்சி ஆட்சி அமைக்க தாங்கள் எந்த ஒரு பிரதிபலனும் இல்லாமல் உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் உறுதிபட தெரிவித்தார். 
ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களான குரல் நத்தம் சந்திரசேகர், சுக்கம்பட்டி பிரபு, குருமூர்த்தி, திருச்சி பாளையம் ரமேஷ், வீரபாண்டி சித்தன், ஜெகநாதன், கார்த்தி, நரேஷ், வினோத் மற்றும் யாசின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.13ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.13ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டம் ஈரோடு துணை மின் நிலைய வீரப்பன்சத்திரம், நாராயணவலசு மின் பாதை மற்றும் திங்களூர் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.13ம் தேதி) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு துணை மின் நிலைய வீரப்பன்சத்திரம், நாராயணவலசு மின் பாதை (காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- காந்தி நகர் 2, 3, சம்பத் நகர், ராணி நகர், சஞ்சய் நகர், சோலை மருத்துவமனை, பெரியவலசு, பாரதிதாசன் வீதி வள்ளியம்மாள் வீதி 2, 3, நேதாஜி நகர், மாணிக்கம்பாளையம் சாலை, தில்லை வீதி, எம்.ஜி.ஆர்.நகர், வீரப்பன்சத்திரம், எஸ்.ஜி.வலசு, சிஎன்சி கல்லுாரி பகுதி, மோகன்குமாரமங்கலம் வீதி, நாராயணவலசு, மாணிக்கம்பாளையம், நல்லிதோட்டம், காமதேனு நகர், வெட்டுக்காட்டுவலசு மற்றும் கைகாட்டிவலசு.

திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண் பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், தலையம்பாளையம், குள்ளம்பாளையம், வீராணம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கராண்டிபாளையம், பொன்முடி, கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப் பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர்.
கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இதன் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களிலுள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், இன்று (டிச.11) புதன்கிழமை முதல் அடுத்தாண்டு (2025) ஏப்ரல் 9ம் தேதி வரை 120 நாட்களுக்கு 9,849.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.

அதன்படி, இன்று (டிச.11) காலை கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, உதவி பொறியாளர்கள் குமார், ரத்தினகிரி ஆகியோர் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டார். அப்போது வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்து சென்றது.