வெள்ளி, 4 அக்டோபர், 2024

பவானி அருகே குடிபோதையில் ரூ.2,000 கேட்டு ஓட்டுநரை தாக்கிய காவலர்: பணியிடை நீக்கம்

பவானி அருகே குடிபோதையில் ரூ.2,000 கேட்டு ஓட்டுநரை தாக்கிய காவலர்: பணியிடை நீக்கம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 32). இவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அம்மாபேட்டை அருகேயுள்ள சின்னப்பள்ளம் காவல் சோதனைச்சாவடியில் இரவு பணியில் இருந்தார்.

அப்போது, அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் வாகன ஓட்டுநரிடம் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டு அடித்ததாக தெரிகிறது. இதை பார்த்த சக வாகன ஓட்டுநர்கள் திரண்டு காவலரிடம், குடிபோதையில் ஏன் வாகன சோதனையில் ஈடுபட்டு ஓட்டுநரை அடிக்கிறீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

இது சம்பந்தமான, வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, பவானி துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், புகாருக்கு உள்ளான காவலர் செல்வக்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், குடிபோதையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடை உரிமையாளர் போக்சோவில் கைது

ஈரோட்டில் சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடை உரிமையாளர் போக்சோவில் கைது

ஈரோடு மரப்பாலம், வள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (32). பூக்கடைக்காரர். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. 
இந்நிலையில் ரகுமான் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி அப்துல் ரகுமான் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டில் 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

ஈரோட்டில் 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

ஈரோடு வீரப்பன்பாளையம் அருகிலுள்ள நாராயணா டெக்னோ பள்ளி, நசியனூர் சாலையில் நாரயணவலசு அருகில் செயல்பட்டு வரும் நந்தா சென்ட்ரல் சிட்டி சிபிஎஸ்சி பள்ளி மற்றும் மாணிக்கம்பாளையம் அருகிலுள்ள ஈரோடு பப்ளிக் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வடக்கு காவல்நிலையத்திற்கு மர்ம நபர் மூலம் மிரட்டல் வந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, ஈரோடு மாநகர டிஎஸ்பி முத்துகுமரன் தலைமையில் போலீசார் மூன்று குழுவாக பிரிந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பொருட்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல, நாராயணவலசு பகுதியில் உள்ள நந்தா சென்ட்ரல் பள்ளி, மாணிக்கம்பாளையம் அருகிலுள்ள ஈரோடு பப்ளிக் பள்ளியிலும் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் இறுதியில் தான் வெடிகுண்டு மிரட்டலின் உண்மை தன்மை தெரிய வரும் என்பதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மூன்று பள்ளிகளும் சிபிஎஸ்இ பள்ளி என்பதால் வகுப்பறை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 3 அக்டோபர், 2024

வடகிழக்கு பருவமழை: ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி

வடகிழக்கு பருவமழை: ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில், ஈரோடு, நம்பியூர், பவானி, பெருந்துறை, அந்தியூர், ஆசனூர், கொடுமுடி, சென்னிமலை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய 11 தீயணைப்பு நிலையங்களில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி இன்று (3ம் தேதி) நடைபெற்றது.
அதன்படி, ஈரோடு காவேரிக்கரை கருங்கல்பாளையம், நம்பியூர் எலத்தூர் எல்பி.பி வாய்க்கால், பவானி காடையாம்பட்டி ஏரி, பெருந்துறை வாய்க்கால் மேடு எல்.பி.பி. வாய்க்கால், அத்தாணி பவானி ஆறு, ஆசனூர் ஓங்கல்வாடி குளம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் படித்துரை, சென்னிமலை இரட்டாபாளையம் எல்.பி.பி. வாய்க்கால், மொடக்குறிச்சி மண்ணாதம்பாளையம் காவிரி ஆறு, சத்தியமங்கலம் செண்பகபுதூர் வாய்க்கால், கோபிசெட்டிபாளையம் மூலவாய்க்கால் சத்தி ரோடு கோபி ஆகிய இடங்களில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இதில், வடகிழக்கு பருவமழை காலங்களில் எதிர்நோக்கும் மழைக்கால பேரிடர்களை கையாளும் விதம், தற்காலிக மிதவை உருவாக்கி மழை வெள்ளத்தில் மிதக்கும் விதம் கட்டட இடிபாடுகளில் உயிரினங்களை மீட்கும் உபகரணங்கள், தீயணைப்பு துறையில் பயன்படுத்தப்படும் ஊர்திகள் மற்றும் அவசர கால ஊர்தி தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை மற்றும் சத்தியமங்கலம் செண்பகபுதூர் வாய்க்கால் ஆகிய இடங்களில் சுழல் ரம்பம், ஸ்கூபா நீச்சல் உடை, உடைக்கும் ரம்பம், மூச்சு கருவி, அதிக அழுத்தம் கொண்ட காற்று பைகள், உயிர்காக்கும் மிதவை, உயிர் காக்கும் மிதவை ஜாக்கெட், படகு மற்றும் விரிக்க வைக்கும் கருவி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் காட்சிபடுத்தப்பட்டு அதன் பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள், தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வருவது சிரமம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வருவது சிரமம்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோட்டில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மகிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சையது ஹசீனா தலைமையில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்றார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நடிகர் விஜயின் கொள்கைகள் என்ன.?, எதற்காக கட்சி ஆரம்பிக்கிறார் என்றே தெரியவில்லை. ஜாதி ,மதம், மொழி கடந்து அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கக்கூடிய ஒரு நடிகர். அவர் கட்சி ஆரம்பித்து தன்னை ஒரு சிறு வட்டத்துக்குள் சுருக்கி கொள்கிறார்.

இது போன்ற கட்சி ஆரம்பித்த பல நடிகர்கள் காணாமல் போய்விட்டனர். அவர் மக்களுக்காக வலியுறுத்தக்கூடிய கொள்கைகளைக் கொண்ட கட்சியில் இணைந்து செயலாற்றி இருக்கலாம். தனி ராஜ்ஜியம் கிடைக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் விமர்சித்தார் .

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வருவது சிரமம் என்றும் தன்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் கள்ளு கடைகளை திறப்பது நல்லது. அதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் கூறினார். 

மேலும், அதிமுக தனது வாக்கு வங்கியில் 20 சதவீதத்தை இழந்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டார் . இந்த ஆலோசனை கூட்டத்தில் மகளிர் அணியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது வழக்கு

காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் சாந்தி, ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் மாதவன் ஆகியோரின் அறிவுரைப்படி ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் காந்தி ஜெயந்தியையொட்டி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா? என்று பல்வேறு கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது கடைகள், நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா? பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படுகிறதா? அல்லது 3 நாட்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்பு வழங்கப்படுகிறதா? அதற்கான படிவம் சமர்ப்பித்துள்ளனரா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

அதில், 45 கடைகள், 56 உணவு நிறுவனங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 106 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 30 கடைகளிலும், 49 உணவு நிறுவனங்களிலும், 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் என மொத்தம் 82 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காததும், விதிமுறைகளை கடைபிடிக்காததும் கண்டறியப்பட்டது.

இந்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன், 2 அக்டோபர், 2024

ஈரோட்டில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

ஈரோட்டில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
 இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, காந்தி சிலைக்கு கதர் சிட்டம் மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.