ஈரோடு மாவட்டத்தை குறி வைக்கும் திமுக.. இளைஞரணிக்கு சீட் கிடைக்குமா.?
சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுகவில் வேட்பாளர் தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க திமுக தலைமையகம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
குறிப்பாக, அதிமுகவின் ஆதிக்கம் அதிகம் காணப்படும் கொங்கு மண்டலமான ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் செல்வாக்குள்ள புதிய முகங்களை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் பழைய வேட்பாளர்களுக்கு பதிலாக இளம் தலைமுறையை களமிறக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகத்திற்கு இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.
நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் முதல் இளைஞரணி அமைப்பை வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் வரை தொடர்ந்து செயல்பட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நம்பிக்கையை பெற்றவராக திருவாசகம் பார்க்கப்படுகிறார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களின் வெற்றிக்காக மாவட்டம் முழுவதும் இளைஞர்களை ஒருங்கிணைத்து பணியாற்றியதாலும் அவர் கட்சியினரிடையே கவனம் பெற்றுள்ளார்.
இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள், அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவி செய்வது போன்ற சமூக பணிகளின் மூலம் ஈரோடு மாவட்ட இளைஞர்கள் மத்தியில் திருவாசகம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு திருவாசகம் செயல் பட்டாலும், முதலியார் சமூக வாக்குகள் இவருக்கு கணிசமாக உள்ள நிலையில், திருவாசகம் போட்டியிட்டால் முதலியார் சமூகம் மட்டுமின்றி பல சமூகங்களின் ஆதரவும் அவருக்கு கிடைக்கும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மேலும், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ. படித்துள்ள இளைஞரான திருவாசகம் கல்வி தகுதியும், சமூகப் பணிகளும் இணைந்தவராக பார்க்கப்படுகிறார்.
இதனால், இளம் தலைமுறையை முன்னிறுத்தும் வகையில் அவருக்கு இந்த முறை சீட் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எட்டு வயது முதல் மொழிப் போராட்டம், ஈழத் தமிழருக்கான ஆதரவு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களில் தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருவதும் அவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இதனால், ஈரோடு கிழக்கு அல்லது ஈரோடு மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாசகத்திற்கு நிச்சயம் பெற்றுக் கொடுப்பார் என்பது ஈரோடு மாவட்ட இளைஞர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதுமட்டுமின்றி மாவட்ட செயலாளரும், ஈரோடு மாவட்ட அமைச்சருமான சு.முத்துசாமியின் ஆதரவும் திருவாசகத்திற்கு இருப்பதாக கூறப்படுவதால், இந்த முறை ஈரோடு கிழக்கு அல்லது ஈரோடு மேற்கு தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிட வாய்ப்பு அதிகம் என திமுக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து, இளைஞரணியை சேர்ந்த திருவாசகத்திற்கு இந்த முறை சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்குமா?! என்பது இளைஞர் அணியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


