செவ்வாய், 15 அக்டோபர், 2024

பெருந்துறையில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வட மாநில வாலிபர் கைது

பெருந்துறையில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வட மாநில வாலிபர் கைது

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு நேரடியாக பணத்தை வங்கி மூலம் அனுப்பாமல், சட்டவிரோதமாக நபர்கள் மூலம் பணத்தை பரிமாறிக் கொள்வது ஹவாலா எனப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் அங்கு ஒரு வாலிபர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தனர். அப்போது அதில் கட்டு கட்டாக ரூ.40 லட்சம் இருந்தது. இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் சிரிகி மாவட்டம் ரிபாரி வஸ்ராம்புராவைச் சேர்ந்த கங்காராம் என்பவருடைய மகன் கீமாராம் (வயது 25) என்பது தெரியவந்தது.

மேலும், அவரிடம் உள்ள ரூ.40 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், ரூ.40 லட்சத்தையும், கீமாராமையும் ஈரோடு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுள்ளிபாளையம், குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (15ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை அவர் பார்வையிட்டார். மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, குள்ளம்பாளையம் ஊராட்சி குள்ளம்பாளையத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.59 லட்சம் வீதம் ரூ.50.26 லட்சம் மதிப்பீட்டில் 14 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், அதேப் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, நியாயவிலை கடை தெருவில் ரூ.3.64 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வசதியுடன் கூடிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், குள்ளம்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் மண்கரை அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அதேப் பகுதியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் புனரமைப்பு செய்யும் பணியினையும், கோபிகவுண்டன்பாளையம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சூரநாயக்கனூர் மம்முட்டிதோப்பு பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் எடை, உயரம், வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேலும், சீனாபுரம் ஊராட்சி, சீனாபுரத்தில் பிரதான் மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் ஈரோடு திங்களூர் ரோடு முதல் மேற்கு சீனாபுரம் வரை சாலை மேம்பாடு செய்யப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், பிரேமலதா உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் வரும் 19ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் வரும் 19ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 19ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் தலா ஒரு இடத்தில் நடக்கிறது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் மூலம் புகார் அளிக்கலாம்.

அதன்படி ஈரோடு வட்டத்தில் சின்னமாரியம்மன் கோயில் வளாகம், பெருந்துறை வட்டத்தில் வள்ளிபரத்தான்பாளையம், மொடக்குறிச்சி வட்டத்தில் அவல்பூந்துறை ராசாம்பாளையம், கொடுமுடி வட்டத்தில் சோளக்காளிபாளையம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் கடுக்கம்பாளையம், நம்பியூர் வட்டத்தில் சாந்திபாளையம், பவானி வட்டத்தில் சின்னபுலியூர், அந்தியூர் வட்டத்தில் எண்ணமங்கலம் -1, சத்தியமங்கலம் வட்டத்தில் பெரியூர் அரியப்பம்பாளையம், தாளவாடி வட்டத்தில் மல்லங்குழியிலும் முகாம் நடக்கிறது. 

எனவே, மேற்கொண்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்த கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம்: 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு பாராட்டு

ஈரோட்டில் கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம்: 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு பாராட்டு

ஈரோடு வட்டம் மாணிக்கவாசகர் காலனியைச் சேர்ந்தவர் சுதன். இவரின் மனைவி காஞ்சனா மாலிக் (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் இருக்கும் போது இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது, பிரசவ வலி அதிகமானதால், அந்த வீட்டிலேயே ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் சந்திரன் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில், அதிகாலை 3.28 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தாய் மற்றும் சேய் இருவரையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

அவசரம் கருதி பிரசவம் பார்த்த அவசர கால மருத்துவ நுட்புணர் சந்திரன், உதவிய ஓட்டுநர் சிவசங்கர் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் மற்றும் மாணிக்கவாசகர் காலனி பொதுமக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
ஹஜ்ரத் மகபூப் சுபாஹானி மீலாது விழா... 2500 கிலோ மட்டன் பிரியாணி தயாரித்து ஏழை எளியவர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.

ஹஜ்ரத் மகபூப் சுபாஹானி மீலாது விழா... 2500 கிலோ மட்டன் பிரியாணி தயாரித்து ஏழை எளியவர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ஹஜ்ரத் மகபூப் சுபாஹானி உருஸ் மற்றும் மீலாது விழா ... 2500 கிலோ மட்டன் பிரியாணி தயாரித்து ஏழை எளியவர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.

ஹஜ்ரத் மகபூப் சுபாஹானி அவர்களின் உரூஸ் மற்றும் மீலா துவிழா இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் கடந்த 11  நாட்களாக தொடர்ந்து பிரசங்கமும், சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ளப்படும் ஹஜ்ரத்திற்கு மரியாதை  செலுத்தப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஹஜ்ரத்திற்கான  மரியாதை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் சேலம் கோட்டை மேல் தெரு சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் சேலம் கோட்டை இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் சார்பில், சேலம் ஜாமியா மசூதியின் முன்னாள் முத்தவல்லியும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான அமான் என்கின்ற நாசக்கான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நிர்வாகிகள், பண்டு, அஸ்மத், சானு, விநாயத், சாஜ் மான் கான், ரோகன், சைப்பூர் ரஹ்மான், தாஜுதீன், சேக் மதார்,  நூர், பாபு அனிஷ் அர்பாஸ்கான் அஜித் அலி முபாரக் அகமது ஜாவித் இர்ஃபான் இம்ரான் உஸ்மான் யாசின் மற்றும் தாஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், 2500 கிலோ மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு இன்று காலை ஏழு மணி முதல் ஆயிரக்கணக்கான அனைத்து சமுதாயத்தினருக்கும் தப்ரூப் வழங்கி சேலம் கோட்டை இஸ்லாமிய நற்பணி மன்றத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். 
இந்த விழா குறித்து சேலம் ஜாமியா பள்ளிவாசலின் முன்னாள் முத்தவல்லியும்  திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான அமான் என்கின்ற நாசர் கான் குறுகையில், கடந்த 65 வருடங்களாக ஹஜ்ரத் அவர்களின் மீலாது விழா சேலம் கோட்டை மேல் தெரு பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் 66வது ஆண்டான இன்று ஏழை எளியவர்களுக்கு 2500 கிலோ மட்டன் பிரியாணியும் அதனுடன் தால்ஜா மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பெருமைப்பட தெரிவித்தார். சுமார் 3,000 மேற்பட்ட  அனைத்து சமுதாயத்தினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்த தப்ரூக் எனும் பிரசாதத்தை பெற்று சென்றனர் என்றும் தெரிவித்தார்.

திங்கள், 14 அக்டோபர், 2024

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள சேலம் மாநகராட்சி பகுதிகளில் சேலம் மாநகராட்சி ஆணையாளருடன் சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஆய்வு.

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள சேலம் மாநகராட்சி பகுதிகளில் சேலம் மாநகராட்சி ஆணையாளருடன் சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஆய்வு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளசேலம் மாநகராட்சி பகுதிகளில் சேலம் மாநகராட்சி ஆணையாளருடன் சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஆய்வு. 

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 22 ஆவது கோட்டம் சிவதாபுரம் மற்றும் 23 வது கோட்டத்திற்கு உட்பட்ட வேடிக்கவுண்டர் காலனி, காமராஜர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தும், பாலத்தை மூழ்கடித்தும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங் அவர்களை வரவழைத்து சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து எடுத்துரைத்தும், இனிவரும் காலம் மழைக்காலமாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரப்படாமல் உள்ள ஓடைகள் மற்றும் சாக்கடைகளை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 
பின்னர் சில மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்து நாயக்கன்பட்டி ஊராட்சி மற்றும் ஆத்துக்காடு பகுதிகளில் கான்கிரீட் சாலை வேண்டும் என்ற அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் கான்கிரீட் அமைக்கும் சாலை மற்றும் சுற்றுச்சூழல் கட்டும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து முத்துநாயக்கன்பட்டியில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் உள்ள சரபங்கா நதி பாலம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் பாலம் மிகவும் பழுதடையுள்ளதால், பழைய பாலத்தை அதனை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் வலியுறுத்தினார். சேலம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வுப் பணியின் போது, பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர், முத்துநாயக்கன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, சக்தி, 22-வது கோட்டை மாமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்ஆர்பி செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு செய்தனர்.

தேர்தல் வாக்குறுதியின்படி எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். புதிததாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 1500 செவிலியர் பணியிடங்களை எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும்.

கொரோனா காலத்தில் பணிபுரிந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும். மகப்பேறு விடுப்பிற்கான ஊதியத்தை வழங்கிட வேண்டும். பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

பாலியல் குற்றங்களை விசாரிக்க அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில தலைவர் ஜி.சசிகலா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் ச.விஜயமனோகரன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் மு.சீனிவாசன் நிறைவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயசுகி, மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.